அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” – கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கை !

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” என கலாநிதி சுரேன் ராகவன்,  நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (04.11.2020) ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையின் சிறைகளில் அரசியல் கைதிகளாக தற்போது உள்ளோர் எத்தனை பேரென்றும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கேள்வியெழுப்பியுள்ளார்

இது தொடர்பான பூரண விளக்கத்தினை எதிர்வரும் சர்வதேச நீதி தினத்திற்கு (ஜூலை. 17.2021) முன்னதாக தெரிவிக்கும்படியும் தேவைப்பட்டால் நாடாளுமன்ற விவாதமொன்றையும் இதுதொடர்பில் ஒழுங்கு செய்யுமாறும் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் பலர் படிப்படியாக முன்னைய ஆட்சிக் காலங்களில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது எஞ்சியிருப்பவர்களையும் சட்டத்தின் முன்னிறுத்தியோ அல்லது பொது மன்னிப்பு அளித்தோ சமூகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு தேவையான கோரிக்கையினை முன்வைக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு இருப்பதாகவும் அதனாலேயே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் நல்லிணக்கமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றினை நியமித்து அக்குழுவினுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதி அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *