379 பேருடன் பயணித்த ஜப்பான் எயார்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தீக்கிரை

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று தீப்பிடித்துள்ளது. 

குறித்த விமானம் இன்று (2) ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கிய போது கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்ததாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

JAL 516 என்ற இந்த விமானம் ஹொகைடோவிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது. 

விமானம் தீப்பிடித்து எரியும் காணொளியை NHK எனும் ஜப்பானிய அரச ஊடகம் வௌியிட்டுள்ளது. 

விமானத்தில் 367 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் உட்பட  379 பேர் பத்திரமாக வௌியேற்றப்பட்டதாக NHK தெரிவித்துள்ளது. 

விமானம் தரையிறங்குகையில், ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக Reuters மற்றும் NHK செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. 

அந்த கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் பத்திரமாக வெளியே வந்துவிட்டதாகவும், மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரிவில்லை என்றும் NHK செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு குறித்த கடலோர காவல்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

ஜப்பான் எயார்லைன்ஸ் விமானத்தின் உள்ளே இருந்த அனைத்து பயணிகளும் காற்று நிரப்பப்பட்ட சாய்தளம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reported by :N.Sameera

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *