வவுனியா-தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.வவுனியா தவசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாலவிநாயகர் 3 ஆம் ஒழுங்கை வீதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றை 15 உறவினர்கள் மாத்திரம் பங்கேற்று நடத்துமாறு தெரிவித்து சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
எனினும், குறித்த திருமண நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் எனவும் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து நேற்று முன்தினம் மதியம் குறித்த திருமண வீட்டுக்குச் சென்ற சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை வழங்கியிருந்தனர்.
எனினும், தொடர்ச்சியாக சுகாதார நடைமுறையை மீறி செயற்பட்ட மணமக்கள் உட்பட அவரின் வீட்டார் அன்றைய தினம் மாலை சுகாதாரப் பிரிவினரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் திருமண நிகழ்வின் புகைப்படப் பிடிப்பாளரின் உதவியுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் சுயதனிமைப்படுத்தல் மேற்கொள்வதற்கான நடவடிக்கையையும் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த திருமண நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரியவருகிறது.
—————————-
Reported by : Sisil.L