முட்டை மற்றும் கோழி இறைச்சிகளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 – 36 ரூபாவிற்கு இடையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

இருப்பினும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம் எனவும் முட்டை ஒன்றின் சில்லறை விலை 45 ரூபாவுக்கும் குறைவாக பேணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அரிசி மற்றும் மக்காச்சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சி உற்பத்தி உபரியாக உள்ளதால், கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிட ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சமீப காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், தற்போது கோழி இறைச்சி கிலோ ஒன்று 950-1000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய, இறைச்சி வகைகளையும் தொடர்ந்து வழங்க முடிந்தால் எதிர்வரும் சிங்கள புத்தாண்டு காலத்திலும் தட்டுப்பாடு இன்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்பட்டால், அதை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *